இந்தியா

உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் பிஎஸ்என்எல் 4ஜி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

பிஎஸ்என்எல் (BSNL)-ன் 4ஜி நெட்வொர்க் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் பிஎஸ்என்எல் 4ஜி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
PM Modi
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL)-ன் 4ஜி நெட்வொர்க் சேவையை பிரதமர் மோடி இன்று ஒடிசாவின் ஜார்சுகுடாவில் இருந்து தொடங்கி வைத்தார். இதன் மூலம், இனி நாடு முழுவதும் பிஎஸ்என்எல்-ன் 4ஜி சேவை கிடைக்கும்.

முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பம்

புதிய 4ஜி தொழில்நுட்பத்தைக் கொண்ட 92,600 கோபுரங்கள் உட்பட, பிஎஸ்என்எல் அமைத்த 97,500 க்கும் மேற்பட்ட 4ஜி செல்போன் கோபுரங்களின் இயக்கத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ரூ.37,000 கோடி செலவில் நிறுவப்பட்ட இந்தச் செல்போன் கோபுரங்கள், முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோபுரங்கள் சோலார் மின்சாரம் மூலமாக இயக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமப்புற டிஜிட்டல் இணைப்பு

நாடு முழுவதும் டிஜிட்டல் இணைப்பை விரிவுபடுத்துவதிலும், கிராமப்புறங்களுக்கு டிஜிட்டல் சேவையைச் சிறப்பாக வழங்குவதிலும் பிஎஸ்என்எல்-ன் 4ஜி சேவை முக்கியப் பங்களிப்பை வழங்கும். இதன் மூலமாக 20 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய பிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு 4ஜி சேவை கிடைக்கும்.

நாட்டில் இதுவரை இணைய இணைப்பு கிடைக்காத 26,700-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு 4ஜி சேவை மூலமாக இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதில் ஒடிசாவில் 2,472 கிராமங்களுக்கு இணைய இணைப்பு வழங்கப்படவுள்ளது.

பிரதமர் மோடி பேச்சு

4ஜி நெட்வொர்க் சேவையை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடி பேசுகையில், "வளங்கள் நிறைந்த ஒடிசா மாநிலம் இனி பின்தங்கியிருக்காது. உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு 4ஜி சேவைகளைத் தொடங்கிய உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது. பிஎஸ்என்எல் வாயிலாக இந்தியா உலகளாவிய தொலைத்தொடர்பு உற்பத்தி மையமாக மாறும்" என்று தெரிவித்தார்.