இந்தியா

RCB வெற்றி விழா: 35 ஆயிரம் சீட்டுக்கு 3 லட்சம் பேர்.. கூட்ட நெரிசல் குறித்து முதல்வர் சித்தராமையா விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

RCB வெற்றி விழா: 35 ஆயிரம் சீட்டுக்கு 3 லட்சம் பேர்.. கூட்ட நெரிசல் குறித்து முதல்வர் சித்தராமையா விளக்கம்
Chief Minister Siddaramaiah's press conference on the Bengaluru stampede
ஆர்சிபி அணிக்காக நடைப்பெற்ற பாராட்டு விழாவினை காண, சின்னசாமி மைதானத்திற்கு வெளியே குவிந்த ரசிகர்களிடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சிறுமி உட்பட 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நடைப்பெற்ற ஐபிஎல் 2025 தொடரின் இறுதிப்போட்டியில், பஞ்சாப் அணியினை வீழ்த்தி முதல் முறையாக பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையினை வென்றது. 17 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பைக்காக காத்திருந்த ஆர்சிபி ரசிகர்கள், பெங்களூரு அணியின் வெற்றியினை பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

சோகத்தில் முடிந்த ஆர்சிபி வெற்றி விழா:

வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று பெங்களூருவிலுள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக பெங்களூரு வருகைத் தந்த வீரர்களை கர்நாடகா மாநிலத்தின் துணை முதல்வர் நேரில் வரவேற்று உற்சாகப்படுத்தினர்.

முக்கிய நிகழ்வான பாராட்டு விழாவிற்காக, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சின்னசாமி மைதானத்திற்கு வருகை தந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குறிப்பாக, ஸ்டேடியத்தின் 7-வது கேட் பகுதியிலும், நுழைவாயிலிலும் கூட்டம் அலைமோதியது. எதிர்பாரதவிதமாக கூட்ட நெரிசலில் சிக்கி தற்போது வரை சிறுமி உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர், 47 பேர் காயமடைந்துள்ளனர்.

10 லட்சம் நிவாரணம்:

இதுத்தொடர்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த கர்நாடகா மாநில முதல்வர், சித்தராமையா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

“சின்னசாமி மைதானத்தில் 35,000 பேர் மட்டுமே அமர வசதி உள்ள நிலையில், விதான் சௌதா முன்பு 1 லட்சம் பேரும், சின்னசாமி மைதானத்தின் முன்பு 3 லட்சம் பேரும் கூடி இருந்தனர். கூட்ட நெரிசலில் காயமடைந்த பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சை இலவசமாக வழங்கப்படும். அவர்களுக்கும் உரிய நிவாரணம் தரப்படும்.

நான் எங்கள் தரப்பை நியாயப்படுத்த விரும்பவில்லை. இதை அரசியலாக்கவும் விரும்பவில்லை. 15 நாட்களுக்குள் இதுக்குறித்து முறையான விசாரணை அறிக்கையினை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளேன். பாதுகாப்பு விஷயங்களில் தவறு இழைத்தவர்கள் இருப்பின் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

”அவசர கதியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதே இந்த துயர சம்பவத்திற்கு முக்கிய காரணம். இந்த நெரிசல் சம்பவத்திற்கு கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். இந்த துயர சம்பவத்திற்கு யார் காரணம் என்பதை முதலமைச்சர் சித்தராமையா விளக்க வேண்டும்” என கர்நாடக மாநில பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.

முன்னதாக நிகழ்வு நடைப்பெற்ற சமயத்தில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தியுள்ளனர். இருப்பினும், கட்டுக்கடங்காத கூட்டத்தால் நிலைமை மோசமடைந்தது. ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வருவதிலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.