ஒன்றல்ல, இரண்டல்ல, மொத்தம் 3433 சாலைப்பள்ளங்கள் ஒரே நாளில் (ஜூன் 24, 2025) டெல்லி பொதுப்பணித் துறை (PWD) சீரமைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பணியானது "உலக சாதனை" படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி மாநில பொதுப்பணித்துறை 3400 சாலைப்பள்ளங்களை சீரமைக்க திட்டமிட்ட நிலையில் கூடுதலாக 33 பள்ளங்களை சீரமைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
1400 கி.மீ-க்கு சாலை சீரமைப்பு பணி:
இந்தியாவில் இதற்கு முன்னதாக இதைப்போல் சாலைப்பள்ளங்கள் சீரமைப்பு தொடர்பாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு ஒரே நாளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் புனே மாநகரில் 989 பள்ளங்கள் மற்றும் வதோதரா பகுதியில் 650-க்கும் மேற்பட்ட பள்ளங்கள் ஒரே நாளில் சரிசெய்யப்பட்டுள்ளது.
दिल्ली को सुंदर, व्यवस्थित और सुरक्षित बनाने का हमारा अभियान निरंतर जारी है।
— Rekha Gupta (@gupta_rekha) June 24, 2025
मिशन मोड में काम करना और जनसेवा को सर्वोच्च प्राथमिकता देना हमारी सरकार का संकल्प है। हमारी सरकार विकास पर सिर्फ बातें नहीं करती, धरातल पर काम करती है और उसका परिणाम दिल्ली की जनता देख रही है।… pic.twitter.com/Gct2ET8oOS
இந்த முயற்சி குறித்து, டெல்லியின் பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் சாஹிப் சிங் கூறுகையில், “தாமதங்களைத் தவிர்த்து, அரசின் பொறுப்புகளை உறுதி செய்வதற்கான ஒரு முயற்சி இது. மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு சீரமைப்புப் பணியும் புவி-குறியிடப்பட்ட (geo-tagged) மற்றும் நேரம் பதிவு செய்யப்பட்ட (time-stamped) புகைப்படங்களுடன் ஆவணப்படுத்தப்பட்டு, வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு என மூன்று மண்டலங்களில் 1,400 கி.மீ. சாலைகளில் இந்தச் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட பராமரிப்பு வாகனங்கள், நவீன இயந்திரங்கள் மற்றும் உயர்தரப் பொருட்கள் இந்த சாலைப்பள்ளங்கள் சீரமைப்பு பணியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Potholes repair work completed at Desh Bandhu Gupta Road, Karol Bagh. Thank you for your support and patience. ✅📷 #ByeByePotholes@CMODelhi @p_sahibsingh pic.twitter.com/ghcQS87DOt
— PWD Delhi (@DelhiPwd) June 24, 2025
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள், ட்ரோன் மேப்பிங் மற்றும் அதிகாரிகளின் ஆய்வு பணி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பள்ளங்கள் குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 70 உதவி பொறியாளர்கள், 150 ஜூனியர் பொறியாளர்கள், சாலைப்பணி தொழிலாளர்கள் என 1,000-க்கும் மேற்பட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பருவமழை விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் மழைக் காலத்திற்கு முன்னதாக இந்தச் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.