இந்தியா

மகனுக்கு நிச்சயித்த பெண்ணை மணந்த தந்தை.. குடும்பத்தினர் அதிர்ச்சி

உத்தரப் பிரதேசத்தில் தனது 17 வயது மகனுக்கு நிச்சயம் செய்த பெண்ணை 55 வயது தந்தை திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகனுக்கு நிச்சயித்த பெண்ணை மணந்த தந்தை.. குடும்பத்தினர் அதிர்ச்சி
Father married son's fiancee - Uttar Pradesh
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் பன்ஸ்நகலி கிராமத்தில், தனது 17 வயது மகனுக்கு நிச்சயம் செய்யப்பட்ட ஒரு பெண்ணை 55 வயது தந்தை ஒருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷகீல் (55) என்பவருக்கு ஏற்கனவே ஷபானா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஆறு குழந்தைகள் மற்றும் மூன்று பேரக்குழந்தைகள் உள்ளனர். இவரது 17 வயது மகனுக்கு 22 வயது பெண்ணை திருமணம் செய்ய நிச்சம் செய்து வைத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, மகனின் வயது மற்றும் குடும்பத்தின் நிதிச் சிக்கல்கள் காரணமாக இந்த திருமணத்திற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், ஷகீல் அவரது 17 வயது மகனுக்கு 22 வயது பெண்ணை திருமணம் செய்து வைக்க உறுதியாக இருந்துள்ளார். மேலும் அவரது மகனை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார்.

இவர்களது திருமணம் தொடர்பாக அவ்வப்போது 22 வயது பெண்ணிடம் செல்போனில் பேசியுள்ளார். இது இருவரிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிக நேரம் அந்த பெண்ணுடன் செல்போனில் பேசுவதை கண்ட 17 வயது மகன், தந்தையின் செல்போனை சோதித்து பார்த்துள்ளார்.

அப்போது இருவரும் சந்தேகத்துக்குரிய வகையில் சில விஷயங்களைக் பேசியுள்ளதை அவர் கண்டுபிடித்துள்ளார். இதன் காரணமாக 17 வயது மகன் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

இதையடுத்து, ஷகீல் வேலை நிமித்தமாக டெல்லிக்குச் சென்றுள்ளார். ஒரு நாள் அங்கிருந்து தனது குடும்பத்தினரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தன் மகனுக்கு பார்த்திருந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால், ஷகீலின் மனைவி மற்றும் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். "எனது மருமகளாக வரவிருந்த பெண் இப்போது எனது கணவரின் மனைவியாகிவிட்டால்" என ஷபானா வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எந்தவித புகாரும் பதிவு செய்யப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. "இந்தச் சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரியும், ஆனால் இதுவரை எந்த முறையான புகாரும் வரவில்லை. பாதிக்கப்பட்ட தரப்பினர் யாராவது முன்வந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பூட்டா காவல் நிலைய அதிகாரி அமர் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.