இந்தியா

மத்திய, மாநிலப் படைகளின் கூட்டு நடவடிக்கை: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் 2 பேர் சிக்கினர்!

நாட்டில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய, மாநிலப் படைகளின் கூட்டு நடவடிக்கை: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் 2 பேர் சிக்கினர்!
2 ISIS terrorists caught
மத்தியப் புலனாய்வு அமைப்புகள் மற்றும் ஜார்கண்ட் பயங்கரவாத தடுப்புப் படையுடன் (ATS) இணைந்து செயல்பட்ட டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு, நாடு முழுவதும் வெவ்வேறு இடங்களில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளது.

டெல்லியில் கைது

மும்பையைச் சேர்ந்த ஆஃப்தாப் என்பவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார். பல மாநிலங்களில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட தொடர் தேடுதல் வேட்டையின் ஒரு பகுதியாக இவரது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நாடு தழுவிய நடவடிக்கை தொடர்வதால், இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.

ஜார்கண்டில் கைது

இதேபோல், மற்றொரு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதியான ஆஷார் டேனிஷ், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள தப்ராக் என்ற விடுதியில் இருந்து கைது செய்யப்பட்டார். டேனிஷ் நீண்ட நாட்களாக அந்த விடுதியில் தங்கியிருந்துள்ளார். இவர் ஜார்கண்ட் மாநிலம் பொக்காரோ மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இதுகுறித்து, டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது, "ஜார்கண்ட் பயங்கரவாத தடுப்புப் படையுடன் இணைந்து நடத்தப்பட்ட சோதனையின்போது டேனிஷ் கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையின்போது பல மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. டேனிஷிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. "மேலதிக விசாரணைக்காக அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்லவிருக்கிறோம்" என்று தெரிவித்தனர்.