இந்தியா

வண்டி எப்படி திரும்பும்? 90 டிகிரி வளைவில் மேம்பாலம்.. எதிர்கட்சிகள் கடும் விமர்சனம்

மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பகுதியில் 90 டிகிரி வளைவுடன் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது முதல் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மேம்பால பணிகள் குறித்து ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

வண்டி எப்படி திரும்பும்? 90 டிகிரி வளைவில் மேம்பாலம்.. எதிர்கட்சிகள் கடும் விமர்சனம்
90-Degree Bridge in Bhopal
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஐஷ்பாக் ஸ்டேடியத்திற்கு அருகே புதிதாகக் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம், 90 டிகிரி வளைவு காரணமாக பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

மேம்பாலத்தில் ஏறிய சில நொடிகளிலேயே இவ்வளவு கூர்மையான வளைவுடன் பாதை திரும்புவது, வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் என பொதுமக்களும், எதிர்கட்சியான காங்கிரஸும் தங்களது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இந்த மேம்பாலத்தின் வடிவமைப்பு குறைபாடு குறித்து மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ராகேஷ் சிங் விளக்கம் அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் விமர்சனங்கள் அரசியல் நோக்கம் கொண்டவை என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ராகேஷ் சிங் கூறியுள்ள நிலையில், மேம்பால திட்டப்பணி குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும் எனவும் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ரூ.18 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலமானது 648 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலம் கொண்டதாகும். இந்த மேம்பாலம், மஹாமாய் கா பாக், புஷ்பா நகர் மற்றும் ரயில் நிலைய மண்டலத்தின் நெரிசல் மிகுந்த பகுதிகளை நியூ போபாலுடன் இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலம் செயல்பாட்டிற்கு வரும் போது, தினசரி சுமார் மூன்று லட்சம் பயணிகளின் பயண நேரம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கிய கட்டுமானப் பணி ஆரம்பத்தில் 18 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. பாலத்திற்கு கீழே ரயில்வே பாதை செல்வதால், திட்டமிட்ட காலத்திற்குள் மேம்பால பணி நிறைவடையவில்லை. மின் இணைப்புகள் மாறுதல், மாநில பொதுப்பணித்துறை- ரயில்வேத்துறை இடையிலான ஒப்பந்தங்கள் போன்ற காரணங்களினால் 36 மாதங்களுக்கு மேல் ஆகிய நிலையில், தற்போது தான் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது இந்த மேம்பால பணி.

பொதுப்பணித் துறை (பாலத் துறை) தலைமைப் பொறியாளர் வி.டி. வர்மா, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "மெட்ரோ நிலையம் காரணமாக, அந்தப் பகுதியில் நிலம் குறைவாகவே உள்ளது. நிலம் இல்லாததால், வேறு வழியில்லை. இருப்பினும் இதுக்குறித்து ஆய்வு செய்வோம். இந்த மேம்பாலத்தில் இலகுரக வாகனங்கள் மட்டுமே ஓடும் என்றும், கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்றும்” அவர் தெரிவித்துள்ளார்.



18 மாதங்களில் நிறைவடைய வேண்டிய மேம்பால பணி, 36 மாதங்கள் வரை சென்றதன் மூலமாகவும், அடிப்படை திட்டங்கள் இன்றி இவ்வளவு கூர்மையான வளைவு கொண்ட பாலத்தை கட்டியதன் மூலம் பொதுமக்களின் வரிப்பணம் பல கோடி ரூபாய் வீணாகியுள்ளது என எதிர்கட்சியான காங்கிரஸ் கடுமையாக விமர்ச்சித்துள்ளது.

இந்த மேம்பாலத்தின் பாதுகாப்பு குறித்து சர்ச்சைகள் கிளம்பியுள்ள நிலையில், மேம்பாலத்தின் வளைவு மாற்றப்படுமா? அல்லது கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? என்பது குறித்த எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.