இந்தியா

ஒட்டகத்தின் ஒரு துளி கண்ணீருக்கு இவ்வளவு சக்தியா?

ஒட்டகத்தின் ஒரு துளி கண்ணீர், 26 பாம்புகளின் விஷத்தை முறியடிக்கும் அளவிற்கான ஆன்டிபாடிகளை கொண்டுள்ளதாக ஆய்வின் முடிவில் கிடைத்துள்ள தகவலால் ஒட்டகம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஒட்டகத்தின் ஒரு துளி கண்ணீருக்கு இவ்வளவு சக்தியா?
national research centre on camel Study Reveals Camel Tears May Neutralize Snake Venoms
’பாலைவனக் கப்பல்’ என வர்ணிக்கப்படும் ஒட்டகத்தை நம்மூரில் பார்ப்பது மிக அரிது. பாலைவன நிலப்பரப்புகளுக்காகவே உருவான உயிரினமாக தான் ஒட்டகம் கருதப்படுகிறது.

தேசிய ஒட்டக ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு:

இந்தியாவில் ராஜஸ்தான் போன்ற வறண்ட நிலப்பரப்புகளில் ஒட்டகமானது போக்குவரத்துக்காக பயன்படுத்துவது மட்டுமின்றி, அதன் பால், இறைச்சிக்காகவும் அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகிறது. ஒட்டக வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் ஒரு செய்தி தற்போது வெளியாகி உள்ளது.

அது என்னவென்றால், ஒட்டகத்தின் கண்ணீரில் நோயெதிர்ப்பு ஆன்டிபாடிகள் தன்மை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பிகானாரிலுள்ள தேசிய ஒட்டக ஆராய்ச்சி மையம் (National Research Centre on Camel) நடத்திய சமீபத்திய ஆய்வில், குறிப்பாக பாம்பு விஷத்தை முறியடிக்கும் தன்மை ஒட்டகத்தின் கண்ணீருக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஒட்டகத்தின் ஒரு துளி கண்ணீர்:

ஒட்டகத்தின் ஒரு துளி கண்ணீர் மற்றும் சில நோயெதிர்ப்பு அமைப்புகளிலிருந்து பெறப்பட்ட ஆன்டிபாடிகள் 26 பாம்புகளின் விஷங்களை எதிர்த்து போராடும் என கூறப்படுகிறது. பாம்புக்கடி சிகிச்சைக்கு இந்த ஆய்வின் முடிவானது புதிய பாதையினை திறந்துள்ளதாக கருதப்படுகிறது.

ஆய்வுத் தொடர்பாக தேசிய ஒட்டக ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், விலங்குகளின் கண்ணீர் மற்றும் இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஆன்டிபாடிகள், விஷத்தினால் ஏற்படும் கொடிய விளைவுகளை குறிப்பாக இரத்தக்கசிவு மற்றும் இரத்த உறைவு போன்றவற்றை திறம்பட எதிர்க்கின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

பாம்புக்கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்:

இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக பாம்புக்கடியினால் மட்டும் 58,000 நபர்கள் உயிரிழக்கின்றன. லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாம்புக்கடியினால் ஊனமடைவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தேசிய ஒட்டக ஆராய்ச்சி மையத்தின் ஆய்வானது பாம்புக்கடி சிகிச்சைக்கு பெரிதும் உதவும் என கருதப்படுகிறது.

பிகானீர், ஜெய்சால்மர், ஜோத்பூர் பகுதிகளில் அதிகளவில் ஒட்டக வளர்ப்பில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய ஒட்டக ஆராய்ச்சி மையமானது, ஒட்டகத்தின் கண்ணீர் மற்றும் இரத்த மாதிரிகளை சேகரிப்பதற்காக உள்ளூர் கால்நடை விவசாயிகளிடம் ஒட்டகத்தின் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு, ஈடாக அவர்களுக்கு பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா உட்பட முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஒட்டகத்திலிருந்து ஆன்டிபாடிகளை சேகரிக்க ஆயத்தமாகி வருகின்றன. இதனால், ஒட்டக வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு கூடுதலாக வருமானாம் கிடைக்க ஒரு வழி பிறந்துள்ளது எனலாம்.