இந்தியா

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ்.. விரைவில் பதவியேற்கும் புதிய முதல்வர்!

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்த நிலையில், அதை திரும்ப பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ்.. விரைவில் பதவியேற்கும் புதிய முதல்வர்!
Manipur
கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் இனக்கலவரத்தால் தவித்து வந்த மணிப்பூர் மாநிலத்தில், மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமையவிருக்கிறது. இதற்காக அங்கு அமல்படுத்தப்பட்டிருந்த குடியரசு தலைவர் ஆட்சியை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றுள்ளது.

வன்முறையும் ஆட்சி மாற்றமும்

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இனத்தவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, கடந்த 2023 மே மாதம் முதல் வன்முறை வெடித்தது. இதில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அமைதியை நிலைநாட்டத் தவறியதாக எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பைரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு பதவி விலகியது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 13-ஆம் தேதி அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, சட்டசபை முடக்கி வைக்கப்பட்டது.

சமரசம் தேடிய பாஜக மேலிடம்

மீண்டும் ஒரு நிலையான அரசை அமைக்கும் நோக்கில், இரு இனங்களையும் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களிடம் பாஜக மேலிடம் கடந்த சில மாதங்களாகத் தீவிர ஆலோசனை நடத்தியது. குறிப்பாக, மெய்தி மற்றும் குகி இனப் பிரதிநிதிகளிடையே நிலவும் கசப்புணர்வை நீக்கி, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு புதிய தலைமையை உருவாக்க பாஜக பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

புதிய முதல்வர் மற்றும் துணை முதல்வர்

டெல்லியில் நேற்று நடைபெற்ற மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் புதிய தலைமை குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில், மணிப்பூர் சட்டசபையின் பாஜக தலைவராகவும், புதிய முதல்வராகவும் முன்னாள் அமைச்சர் ஒய். கெம்சந்த் சிங் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த முன்னாள் பெண் அமைச்சர் நெம்சா கிப்ஜென் துணை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விரைவில் பதவியேற்பு

குடியரசு தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவை அமைப்பதற்கான பணிகள் வேகம் எடுத்துள்ளன. ஒய். கெம்சந்த் சிங் தலைமையிலான புதிய அரசு வரும் பிப்ரவரி 12-ஆம் தேதிக்குள் பதவியேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், கெம்சந்த் சிங் தலைமையிலான என்டிஏ குழு, ஆளுநர் மாளிகையில் ஆளுநர் அஜய் குமார் பல்லாவை சந்தித்து மாநில முதல்வராக அரசு அமைக்க உரிமை கோரியது. இவருடன் சுராசந்த்பூர மற்றும் பெர்சாவல் ஆகிய இரண்டு மாவட்ட எம்எல்ஏக்களும் ஆளுநரைச் சந்தித்தனர்.