இந்தியா

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு.. தேர்தல் ஆணையத்துக்கு நன்றி.. ராகுல் காந்தி கிண்டல்!

“இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி” என ராகுல் காந்தி கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு.. தேர்தல் ஆணையத்துக்கு நன்றி.. ராகுல் காந்தி கிண்டல்!
Rahul Gandhi
பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து 'இறந்தவர்கள்' என்று கூறி நீக்கப்பட்ட சிலரை சந்தித்து, அவர்களுடன் தேநீர் அருந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்த தனித்துவமான அனுபவத்தைத் தந்தமைக்காகத் தேர்தல் ஆணையத்திற்கு நன்றி என கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டபோது, இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரு இடங்களில் பதிவு செய்தவர்கள் எனக்கூறி சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கியது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் இருந்ததாகவும் அவர் புகார் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது.

ராகுல் காந்தியின் கிண்டலான பதிவு

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தால் உயிரிழந்தவர்கள் என்று கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சிலரை ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்திருக்கின்றன. ஆனால், 'இறந்தவர்களுடன்' தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில்லை. இந்த தனித்துவமான அனுபவத்தைத் தந்ததற்குத் தேர்தல் ஆணையத்திற்கு நன்றி” என கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

ஆர்.ஜே.டி. கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவின் ரகோபூர் தொகுதியைச் சேர்ந்த ரமிக்பால் ரே, ஹரேந்திர ரே, லால்முனி தேவி, வச்சியா தேவி, லால்வதி தேவி, பூனம் குமாரி, முன்னா குமார் ஆகியோர், திருத்தத்திற்கான ஆவணங்களை அளித்திருந்தும் அவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று, இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, அரசியல் செயல்பாட்டாளர் யோகேந்திர யாதவ், தேர்தல் ஆணையத்தால் இறந்தவர்கள் என அறிவிக்கப்பட்ட சிலரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.