தமிழ்நாடு

சிறுமிக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை: திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!

சென்னையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், திமுக நிர்வாகி ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமிக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை: திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!
Pocso Case
சென்னையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், திமுக நிர்வாகி ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக இக்கொடூரம் அரங்கேறி வந்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சென்னை திருமங்கலம் பகுதியில் வசிக்கும் காவல் துறை ஊழியர் ஒருவரின் 12 வயது மகள், தனியார் அறக்கட்டளை ஒன்றில் நடனம் பயின்று வருகிறார். அங்கு குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படும் 'குட் டச், பேட் டச்' (Good Touch, Bad Touch) விழிப்புணர்வு மூலம், தனக்கு நேர்ந்த பாதிப்பை அந்தச் சிறுமி அடையாளம் கண்டுள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், உறவினரான கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பரத் (31) என்பவர் அத்துமீறி நுழைந்து சிறுமிக்கு மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

விழிப்புணர்வால் வெளிவந்த உண்மை

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்தச் சிறுமி தனது நடனப் பள்ளி நிர்வாகியிடம் தைரியமாகத் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பெற்றோரிடம் தகவல் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில், கடந்த 5 ஆண்டுகளாகவே பரத் அந்தச் சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

சிறையில் அடைப்பு

பரத், திமுக வழக்கறிஞர் பிரிவின் பகுதி அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வருவது விசாரணையில் தெரியவந்தது. புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், பரத்தை உடனடியாகக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.