தமிழ்நாடு

"உங்களைக் கட்டிப்பிடிக்கலாமா?"- சென்னையில் மலையாள நடிகையிடம் அத்துமீறிய கல்லூரி மாணவர்!

சென்னை தனியார் ஓட்டலில் தங்கிய மலையாள நடிகையிடம், "உங்களை கட்டிப் பிடிக்கலாமா" என கேட்டு தொல்லை கொடுத்த கல்லூரி மாணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


College student harasses Malayalam actress in Chennai
சென்னை தி.நகரில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த இளம் மலையாள நடிகைக்கு, அந்த ஓட்டலில் பகுதி நேர ஊழியராக பணிபுரியும் கல்லூரி மாணவன் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இண்டர்காம் புகாரும் அத்துமீறலும்

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 26 வயதுடைய பிரபல மலையாள நடிகை ஒருவர், படப்பிடிப்பு மற்றும் இதர பணிகளுக்காகத் தி.நகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஒரு மாதம் தங்குவதற்காக அறை எடுத்துள்ளார். நேற்று இரவு அவர் உணவை ஆர்டர் செய்யத் தனது அறையில் இருந்த இண்டர்காம் கருவியைப் பயன்படுத்தியுள்ளார். அது வேலை செய்யாததால், நேராக வரவேற்பறைக்குச் சென்று அங்கிருந்த ஊழியரிடம் இது குறித்துப் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்த ஊழியர் நடிகையின் அறைக்கு வந்து கருவியைச் சரி செய்துள்ளார்.

அதிர்ச்சியில் உறைந்த நடிகை

கருவியைச் சரி செய்து முடித்த அந்த ஊழியர், "நீங்கள் மலையாள நடிகைதானே?" என்று கேட்டுவிட்டு, எதிர்பாராத விதமாக "உங்களைக் கட்டிப்பிடிக்கலாமா?" எனத் தொடர்ந்து மூன்று முறை கேட்டுத் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் நிலைதடுமாறிப் போன நடிகை, உடனடியாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தார். தகவலறிந்து விரைந்து வந்த மாம்பலம் போலீசார், சம்பந்தப்பட்ட அந்த இளைஞரைப் பிடித்துக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணை மற்றும் எச்சரிக்கை

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் ஆலந்தூரைச் சேர்ந்த 20 வயதுடைய கல்லூரி மாணவர் என்பதும், அந்த ஓட்டலில் கடந்த 6 மாதங்களாகப் பகுதி நேர ஊழியராகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. தான் உணவு ஆர்டர் எடுக்கவே அங்கு சென்றதாக அந்த மாணவர் தரப்பில் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் நடிகை முறையாகப் புகார் அளிக்க முன்வராததால், போலீசார் சி.எஸ்.ஆர் (CSR) பதிவு செய்துள்ளனர். மேலும், அந்த மாணவரிடம் இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரித்து, எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த நடிகை தான் தங்கியிருந்த ஓட்டலை உடனடியாகக் காலி செய்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் வேறொரு ஓட்டலுக்குத் தனது தங்குமிடத்தை மாற்றிக்கொண்டார்.