தமிழ்நாடு

மக்களே உஷார்.. 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வரும் 22 ஆம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மக்களே உஷார்.. 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Meteorological Department Issues Heavy Rain Warning for 6 Districts
தமிழகத்தில் கடந்த 17 ஆம் தேதி முதல் மழை பெய்து வரும் நிலையில், தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது.

மழைக்கான வாய்ப்பு

இன்று (ஜூலை 20) முதல் ஜூலை 22 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசவும் வாய்ப்புள்ளது. அதைத்தொடர்ந்து, வரும் ஜூலை 23 முதல் 25 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல், நாளை (ஜூலை 21) நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் நாளை மறுதினம் (ஜூலை 22) நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி ஃபாரன்ஹீட் (33.8°C) மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 77 டிகிரி ஃபாரன்ஹீட் (25°C) அளவில் இருக்கும்.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் ஜூலை 22 ஆம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.