இந்தியா

வரதட்சணை புகார்.. மாமியார் வீட்டு முன்பு டீ கடை போட்டு நூதன போராட்டம்

ராஜஸ்தானைச் சேர்ந்த கிருஷ்ண குமார் தாக்கத் என்பவர், தன் மீது சுமத்தப்பட்ட வரதட்சணை கொடுமை புகார் மீதான எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், '498A கஃபே' என்ற பெயரில் ஒரு தேநீர் கடையை திறந்துள்ளார். கைவிலங்கு அணிந்துக் கொண்டு வாடிக்கையாளருக்கு தேநீர் வழங்குவதால் இந்தியா முழுவதும் இவரது நூதன போராட்டம் பேசுப்பொருளாகியுள்ளது.

வரதட்சணை புகார்.. மாமியார் வீட்டு முன்பு டீ கடை போட்டு நூதன போராட்டம்
498A Tea Cafe in Rajasthan
ராஜஸ்தானின் பில்வாரா நகரில், கிருஷ்ண குமார் தாகட் என்பவர் '498A டீ கஃபே' என்ற பெயரில் ஒரு தேநீர் கடையைத் திறந்துள்ளார். அது என்னங்க.. 498A? என கேள்வி கேட்ட வாடிக்கையாளர்களுக்கு கிருஷ்ண குமார் அளித்த பதில்கள் அதிர்ச்சியை தரும் வகையில் இருந்தன.

'498A டீ கஃபே':

இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 498A என்பது திருமணமான பெண்களை அவரது கணவரோ அல்லது கணவரின் உறவினர்களோ செய்யும் கொடுமைகளிலிருந்து பாதுகாக்கும் ஒரு சட்டப் பிரிவாகும்.கிருஷ்ண குமார் தாகட் மீது அவரது மனைவி வரதட்சணை கொடுமை தொடர்பான புகார் கொடுத்துள்ளார். தன் மீது போலியான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் கிருஷ்ண குமார், இதனை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தான் நூதனமான முறையில் ஒரு போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்.

அவர் தொடங்கியுள்ள '498A டீ கஃபே'-யானது, அவரது மாமியார் வீட்டு முன்பு தான் திறந்துள்ளார். வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கில் தான் சட்டப் போராட்டங்களை எதிர்கொள்வதை வெளிப்படுத்தும் விதமாக, கிருஷ்ண குமார் தாகட் தேநீரை தன் வாடிக்கையாளருக்கு தரும் போது, கைகளில் கைவிலங்கு அணிந்திருக்கிறார். அவரது டீக்கடையின் சுவர்களில், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளைக் குறிப்பிட்டு எழுதப்பட்ட வாசகங்களுடன் கூடிய பதாகைகளும் தொங்கவிடப்பட்டுள்ளன. இதுக்குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், இவரது நூதன போராட்டம் இந்தியா முழுவதும் பேசுப்பொருளாகியுள்ளது.

நீதி கிடைக்கும் வரை.. தேநீர் கொதிக்கும்:

கிருஷ்ண குமார் தாகட் கடந்த 2018 ஆம் ஆண்டு, மீனாட்சி மாலவ் என்பவரை கரம் பிடித்துள்ளார். இந்நிலையில், அவரது மனைவி 2022-ஆம் ஆண்டு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தம்பதிகளாக இருவரும் இணைந்து தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். பெற்றோர் வீட்டிற்கு சென்ற மீனாட்சி, வரதட்சணை கொடுமை மற்றும் விவாகரத்து கோரி புகார் கொடுத்துள்ளார்.

இதுக்குறித்து கிருஷ்ணா கூறுகையில், “என் மீது சுமத்தப்பட்ட ஒரு பொய் வழக்கினால் எனது ஒட்டுமொத்த வாழ்வும் இருளில் மூழ்கியுள்ளது. கடந்த 3 வருடங்களாக நீதிக்காக நீதிமன்றத்தை நாடியுள்ளேன். எனக்கு ஒரு வயது முதிர்ந்த தாய் ஒருவர் இருக்கிறார். அவர் என்னை சார்ந்து தான் இருக்கிறார். நான் தகரக் கொட்டகையின் கீழ் வசித்து வருகிறேன். என்னிடம் எதுவும் மிச்சமில்லை. பலமுறை என் வாழ்வினை முடித்துக்கொள்ள நினைத்துள்ளேன். என் தாயார் கண்முன்னே தோன்றுவார். அதனால் தற்கொலை தொடர்பான முடிவுகளை கைவிட்டுள்ளேன். நான் மிகவும் சோர்ந்து போய்விட்டேன். இந்த டீக்கடை மூலமாக என் சட்டப்போராட்டத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த திட்டமிட்டுள்ளேன். எனக்கான நீதி கிடைக்கும் வரை, இந்த தேநீர் கொதிக்கும்” என தெரிவித்துள்ளார்.

புகார் தொடர்பாக மீனாட்சி கூறுகையில், “நிலம் வாங்க என் தந்தையிடம் பணம் கேட்டார் கிருஷ்ணா. நான் வாங்கி தர மறுத்தபோது அவர் என்னை அடித்தார். இதனால் தான் நான், என் பெற்றோர் வீட்டிற்கு திரும்பினேன். தற்போது இவரிடமிருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்” என கூறியுள்ளார்.



இந்த நூதன தேநீர் கடை போராட்டம் மூலம், வரதட்சணை தொடர்பான சட்டப் பிரிவுகளால் பாதிக்கப்படும் ஆண்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வர கிருஷ்ண குமார் தாகட் முயற்சிக்கிறார் என சில நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் அடித்தும் வருகிறார்கள்.