இந்தியா

இந்தியாவின் தலைநகர் தெரியாத 10 ஆம் வகுப்பு மாணவர்கள்: ஆசிரியரை கண்டித்த முதல்வர்

இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த அம்மாநில முதல்வர் தலைமையாசிரியரை கண்டித்த சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.

இந்தியாவின் தலைநகர் தெரியாத 10 ஆம் வகுப்பு மாணவர்கள்: ஆசிரியரை கண்டித்த முதல்வர்
Himachal CM Shocked as Class 10 Students Fail Basic GK
இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் (Kullu district) உள்ள ஒரு அரசுப் பள்ளியில், 10 ஆம் வகுப்பு மாணவர்களிடம் இந்தியத் தலைநகரம் எது? மற்றும் குடியரசுத் தலைவர் யார்? என்று அம்மாநில முதல்வர் கேட்ட போது மாணவர்களுக்கு பதில் தெரியாததால், இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இதர ஆசிரியர்களை கடுமையாகக் கண்டித்துள்ளார்.

நேற்றையத் தினம் புதன்கிழமை (ஜூன் 18, 2025) அன்று இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தின் நிர்மண்ட் துணைப்பிரிவு, பாகா சாரஹானிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடிய முதல்வர் பள்ளியில் ஆசிரியர்கள் எவ்வாறு பாடம் நடத்துகிறார்கள்? பள்ளியில் தேவைப்படும் வசதிகள் என்ன? என்பது குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

அப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடிய முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, இந்தியாவின் தலைநகரம் எது? மற்றும் தற்போதைய குடியரசுத் தலைவர் யார்? என வினாக்களை எழுப்பினார். முதல்வர் கேட்ட கேள்விக்கு அங்கிருந்த மாணவர்கள் சரியான பதில்களை அளிக்கவில்லை.

எளிமையான கேள்விகளுக்கு கூட மாணவர்களுக்கு பதில் தெரியாததால் அதிர்ச்சியடைந்த முதல்வர், "நாம் தரமான கல்வியை வழங்குகிறோமா?" என்று சூழ்ந்திருந்த ஆசிரியர்களை நோக்கி கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் மற்றும் இதர ஆசிரியர்களை அழைத்து, மாணவர்களுக்கு தினமும் அரை மணிநேரம் பொது அறிவு வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும், கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

வழக்கமான பாடத்திட்டங்களைத் தாண்டி, மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும், மாணவர்களை நல்ல குடிமகனாக உருவாக்கும் வகையிலும் நடைமுறை வாழ்வியலை, பொதுஅறிவு தொடர்பான தகவல்களை மாணாக்கர்களுக்கு வழங்குவதன் அவசியத்தை ஆசிரியர்களிடம் முதல்வர் எடுத்துரைத்தார். மேலும், மழலையர் பள்ளி முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள பழைய பள்ளி கட்டிடம் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். முன்னதாக, பாகா சரஹான் பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் உள்ளூர் மக்களைச் சந்தித்த முதல்வர், அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார்.

10 ஆம் வகுப்பு பயிலும் மாணவருக்கு இந்தியாவின் தலைநகர் எதுவென்று தெரியவில்லையா? நமது கல்வியின் தரம் என்னவாக உள்ளது? என பலரும் சமூக வலைத்தளத்தின் வாயிலாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.