இந்தியா

வேறு சாதியில் திருமணம்.. 40 பேருக்கு மொட்டை அடித்த கொடூரம்

ஒடிசாவில் பெண் ஒருவர் வேறு சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால், அவரது குடும்பத்தினர் 40 பேருக்கு சடங்கு என்ற பெயரில் மொட்டை அடித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

வேறு சாதியில் திருமணம்.. 40 பேருக்கு மொட்டை அடித்த கொடூரம்
வேறு சாதியில் திருமணம் - 40 பேருக்கு மொட்டை அடித்த கொடூரம்
ஒடிசாவில் வேறு சாதியை சேர்ந்த நபரை திருமணம் செய்ததால், மணப்பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த நாற்பது பேர், 'சுத்திகரிப்பு சடங்கு' என்ற பெயரில் மொட்டை அடிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் ராயகடா மாவட்டத்தின் காசிப்பூர் தொகுதியில் உள்ள பைகனாகுடா கிராமத்தில் நடந்துள்ளது.

பழங்குடியின சமூகத்தை சேர்ந்த அந்தப் பெண், சமீபத்தில் அண்டை கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்தச் திருமணம் கிராம மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, பெண்ணின் குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

40 பேருக்கு மொட்டை:

கிராம மக்கள் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மீண்டும் ஊருக்குள் அனுமதிக்கப்பட வேண்டுமானால், ஒரு சுத்திகரிப்பு சடங்கைச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். இதைச் செய்ய மறுத்தால், காலவரையற்று ஊரில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவீர்கள் என்றும் அக்குடும்பத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிராம மக்களின் இந்த அழுத்தத்தால், குடும்பத்தினர் உள்ளூர் தெய்வத்தின் முன் ஒரு சடங்கின்படி விலங்கு பலி கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, மொட்டை அடிக்கும் சடங்கு நடத்தப்பட்டது. இதன் பின்னரே, அவர்கள் ஊருக்குள் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்று உறுதி அளிக்கப்பட்டது.

விசாரணைக்கு உத்தரவு:

இந்தச் செய்தி காட்டுத்தீ போல் பரவியதும், காசிப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) விஜய் சோய் இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். குடும்ப உறுப்பினர்கள் மொட்டை அடித்த தலையுடன் வயல்வெளியில் அமர்ந்திருக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க கிராமத்திற்கு ஒரு வட்டார அளவிலான அதிகாரி அனுப்பப்பட்டுள்ளார். அறிக்கையின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒடிசாவின் பார்கர் மாவட்டத்தில் வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்ட ஒருவரின் இறுதிச் சடங்குகளை நடத்த ஒரு குடும்பத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா அரசு சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு ஆதரவளிக்கும் ஒரு திட்டத்தைக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ரூ.2.5 லட்சம் நிதியுதவியை அரசு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.