இந்தியா

எம்.பி. மஹூவா மொய்த்ரா ரகசிய திருமணம்.. கணவர் யார் தெரியுமா?

நாடாளுமன்றத்தில் திரிணாமூல் காங்கிரஸ் முகமாக விளங்கும் எம்.பி. மஹூவா மொய்த்ரா ஜெர்மனியில் ரகசியமாக பினாக்கி மிஸ்ராவினை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுத்தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எம்.பி. மஹூவா மொய்த்ரா ரகசிய திருமணம்.. கணவர் யார் தெரியுமா?
MP Mahua Moitra Weds Advocate Pinaki Misra
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது தனது கர்ஜனையால் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் எம்.பி பினாக்கி மிஸ்ராவை கரம் பிடித்துள்ளார்.

மேற்கு வங்காளம் மாநிலத்தின் கிருஷ்ணாநகர் மக்களவை தொகுதியிலிருந்து இரண்டு முறை எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மஹூவா மொய்த்ரா. நாடாளுமன்றத்தில் இவர் பேச ஆரம்பித்தால், ஒட்டுமொத்த அவையும் இவரை நோக்கி தான் இருக்கும். ஆளுங்கட்சியை விமர்சிப்பதாக இருக்கட்டும், தகவல்களை கோர்வையாக தொகுத்து உரையாற்றுவதில் கைத்தேர்ந்தவர்.

மஹூவா மொய்த்ரா, பிஜூ ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், ஒடிசாவின் பூரி தொகுதியிலிருந்து 4 முறை எம்.பி-யாக தேர்ந்தெடுக்கபட்டவருமான பினாகி மிஸ்ராவை ஜெர்மனியில் மிகவும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில், கல்யாண கோலத்தில் மஹூவா மொய்த்ரா, பினாகி மிஸ்ராவுடன் கைக்கோர்த்து நடந்து செல்லும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

மஹூவா மொய்த்ராவின் திருமணம் குறித்து சொந்த கட்சியினருக்கே தகவல் தெரியவில்லை. திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும் தற்போது ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்.

பினாகி மிஸ்ராவின் பின்னணி என்ன?

பிஜூ ஜனதா தளம் கட்சியினை சேர்ந்த பினாகி மிஸ்ரா 1996-ல் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் தனது தடத்தை பதித்தார். இந்திய உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் செயல்பட்டு வருகிறார். பூரி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினரான பினாகி மிஸ்ரா, நிதி நிலைக்குழு மற்றும் வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

50 வயதாகும் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ராவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இதற்கு முன்னர் லார்ஸ் ப்ரோர்சன் உடன் திருமண முறிவு ஏற்பட்டிருந்தது. அரசியலில் நுழைவதற்கு முன்னர், மொய்த்ரா நியூயார்க் மற்றும் லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஜே.பி.மார்கன் சேஸ் வங்கியின் துணைத் தலைவராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பணம் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா டிசம்பர் 2023-ல் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். 2024 ஆம் ஆண்டு நடைப்பெற்ற பொதுத்தேர்தலில் மீண்டும் வெற்றிப்பெற்று தற்போது மக்களவை உறுப்பினராக உள்ளார்.