இந்தியா

தாய், தந்தைக்குப் பதிலாக ‘பெற்றோர்’ - திருநங்கை தம்பதி தொடர்ந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

திருநங்கை தம்பதியரின் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் தொடர்பான வழக்கில் தாய், தந்தைக்குப் பதிலாக ‘பெற்றோர்’ சொன்னால் போதுமானது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  தாய், தந்தைக்குப் பதிலாக ‘பெற்றோர்’ - திருநங்கை தம்பதி தொடர்ந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
கேரள உயர்நீதிமன்றம் மற்றும் திருநங்கை மற்றும் திருநம்பி தம்பதி
கேரள மாநிலம், கோழிக்கோடு- உம்மலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சஹத் மற்றும் ஜியா. இதில், சஹத் பாசில் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய திருநம்பி, ஜியா பாவல், ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை.

திருநங்கை தம்பதி

இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். குழந்தை மீதான ஆசையால், குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்திருந்த மாற்றுப்பாலின தம்பதி, அதில் சட்டச் சிக்கல்கள் இருந்ததால், அந்த முயற்சியைக் கைவிட்டனர்.

பாலின மாற்று அறுவை சிகிச்சையில் இருந்த இருவரும் மருத்துவரை அணுகியதில், சஹத்தின் கருப்பை உள்ளிட்ட உறுப்புகள் அகற்றப்படாததைத் தெரிந்துகொண்டனர். பிறகு மருத்துவர்களின் ஆலோசனைப்படி, ஜியாவின் விந்தணுவை பெற்று, சஹத்தின் கருப்பைக்குள் செலுத்தப்பட்டது. அதன்மூலம் அவர் கர்ப்பமான நிலையில், கடந்த 2023 பிப்ரவரி 9ஆம் தேதி அவர்களுக்கு குழந்தை பிறந்தது.

பெற்றோர் என்று சொன்னால் போதுமானது

குழந்தையின் பிறப்பு கோழிக்கோடு மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இருப்பினும், அதில் அவரது தந்தையின் பெயர் ஜியா பாவெல் என்றும், தாயாரின் பெயர் சஹாத் என்றும் பட்டியலிடப்பட்டுள்ளது.இருப்பினும், தம்பதியினர் தங்கள் தந்தை மற்றும் தாயின் பெயர்களைத் தனித்தனியாகக் குறிப்பிட வேண்டாம் என்று கோரி கேரளா உயர்நீதிமன்றத்தை அணுகினர்.

மனுவை பரிசீலித்த கேரளா நீதிமன்ற நீதிபதி ஜியாத் ரஹ்மான் பிறப்புச் சான்றிதழில் ‘தந்தை’ மற்றும் ‘தாய்’ என்பதற்குப் பதிலாக ‘பெற்றோர்’ என்ற வார்த்தைகளை எழுத வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்குப் புதிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்கவும், பெற்றோரின் பெயரைப் பதிவு செய்ய ஒரு புதிய பத்தியைச் சேர்க்கவும் நீதிமன்றம் மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. பெற்றோரின் பாலின அடையாளம் சான்றிதழில் பதிவு செய்யப்படக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.