விளையாட்டு

4 கேட்சுகளை விட்டுட்டு இப்படி ஆடுறாரு? ஜெய்ஸ்வாலை தாக்கும் நெட்டிசன்கள்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஹெடிங்லி டெஸ்ட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பீல்டிங் ரசிகர்களால் பெரியளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

4 கேட்சுகளை விட்டுட்டு இப்படி ஆடுறாரு? ஜெய்ஸ்வாலை தாக்கும் நெட்டிசன்கள்
Yashasvi Jaiswal's Dropped Catches Spark Fan Outcry on Social Media
ரோகித், விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற நிலையில் பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடுகிறது.

இந்நிலையில், ஹெடிங்லியில் நடைப்பெற்ற இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 371 ரன்கள் என்ற கடினமான இலக்கை வெற்றிக்கரமாக எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நான்கு நாட்கள் இந்தியாவின் கையே மேலோங்கி இருந்தது. கடைசி நாளில் இங்கிலாந்து அணி வீரர்களின் விக்கெட்களை வீழ்த்த முடியாமல் இந்திய பந்துவீச்சளர்கள் திணறினர்.

ஒருபக்கம் லோயர்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இரண்டு இன்னிங்ஸிலும் சொதப்பினார்கள் என்றால், மற்றொரு பக்கம் கேட்சுகளை தவறவிட்டு இந்தியா அணியினை தோல்வி பாதையினை நோக்கி அழைத்து சென்றார்கள் பீல்டர்கள். அதிலும், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசி க்ளாப்ஸ் அள்ளினாலும், இரண்டு இன்னிங்ஸிலும் அவரது மோசமான பீல்டிங் இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றியது.

இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 149 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட பென் டக்கெட்டின் கேட்சை தவறவிட்ட ஜெய்ஸ்வால், ஏறக்குறைய இந்தியா அணியின் தோல்வி உறுதியாகியிருந்த வேளையில் மைதானத்தில் நடனமாடியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

முதல் இன்னிங்ஸில் பும்ராவின் பந்துவீச்சில் மூன்று கேட்ச்கள் உட்பட, இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு கேட்ச் என ஒட்டுமொத்தமாக 4 கேட்ச்களை தவறவிட்டார் ஜெய்ஸ்வால். அவர் தவறவிட்ட கேட்ச் அனைத்தும் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள். முதல் இன்னிங்ஸில் (பென் டக்கெட், ஒல்லி போப் மற்றும் ஹாரி ப்ரூக்), இரண்டாவது இன்னிங்ஸில் (பென் டக்கெட்). முதல் டெஸ்ட் போட்டியில் ஒட்டுமொத்தமாக 7 கேட்ச்களை இந்திய அணியின் பீல்டர் தவறவிட்டிருந்தனர். இதனால், இந்திய பந்து வீச்சாளர்களின் செயல்திறனும் சுணங்கி போனது.

ஜெய்ஸ்வால் கேட்ச்களைத் தவறவிட்டது ஒருபுறமிருக்க, போட்டியின் ஐந்தாவது நாளில் அவர் ரசிகர்களுக்கு மத்தியில் நடனமாடி மகிழ்ந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது. அணியின் மோசமான சூழலில், அவரது இந்தச் செயல் ரசிகர்களுக்கு எரிச்சலூட்டியது. "ரோஹித் சர்மா கேப்டனாக இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது" என்றும், "விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா போன்ற அனுபவமிக்க வீரர்கள் இல்லையென்றால், களம் எப்படியிருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்" என்றும் பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.