இந்தியா

SIR-ஐ எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு.. தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணிக்கு எதிராகத் தி.மு.க. தொடுத்துள்ள வழக்கில், இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SIR-ஐ எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு.. தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
Supreme Court orders Election Commission to respond
தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணிக்கு எதிராகத் தி.மு.க. தொடுத்துள்ள வழக்கில், இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க.வின் எதிர்ப்பு மற்றும் மனுத் தாக்கல்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியை மேற்கொள்வதற்கு ஆரம்பம் முதலே ஆளும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறித் தேர்தல் ஆணையம் இந்தப் பணியைத் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், இந்தப் பணியை ரத்து செய்யக் கோரி, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கறிஞர் விவேக் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் தி.மு.க. தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பீகார் மற்றும் பிற மாநிலங்களில் இதே திருத்தப் பணிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் இதே அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டன.

தி.மு.க.வின் வாதம்

இந்த வழக்கில் தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தனது வாதத்தில், "நவம்பர்-டிசம்பர் காலங்களில் மழை நிவாரணப் பணிகளில் அதிகப்படியான அதிகாரிகள் ஈடுபடுவார்கள். டிசம்பரில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போதும், ஜனவரியில் அறுவடைத் திருநாளான பொங்கலின்போதும் நிறைய பேர் ஊரில் இருக்க மாட்டார்கள். அதனால், தமிழகத்தில் இந்தக் காலகட்டத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்கொள்வது என்பது சரியாக இருக்காது" என்று வலியுறுத்தினார்.

நீதிமன்றத்தின் உத்தரவு

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த விவகாரம் குறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டதுடன், அதற்கான நோட்டீசையும் அனுப்பியது. அத்துடன், இந்த விவகாரத்துடன் தொடர்புடைய மனுக்களை விசாரிக்க வேண்டாம் என்று, அது தொடர்பான மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களையும் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த வழக்கு வருகிற நவம்பர் 26-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.