இந்தியா

வீட்டு மொட்டை மாடியில் கஞ்சா செடி.. உதவி கணக்கு தணிக்கை அதிகாரி செய்த பகீர் செயல்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வாடகை வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகளை வளத்து வந்த உதவி கணக்கு தணிக்கை அதிகாரியை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

வீட்டு மொட்டை மாடியில் கஞ்சா செடி.. உதவி கணக்கு தணிக்கை அதிகாரி செய்த பகீர் செயல்
வீட்டு மொட்டை மாடியில் கஞ்சா செடி.. உதவி கணக்கு தணிக்கை அதிகாரி செய்த பகீர் செயல்
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் வருமான கணக்கு தணிக்கை அலுவலகத்தில் உதவி கணக்கு தணிக்கை அதிகாரியாக பணியாற்றி வருபவர் ஜிதின். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 27 வயதான ஜிதின் திருவனந்தபுரம் கமலேஷ்வரம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் சக அலுவலக ஊழியர்களான உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த இருவருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் ஜிதின் வசிக்கும் வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக கேரள போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு ஜிதின் வீட்டில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஐந்து கஞ்சா செடிகள் செடி வளர்க்கும் தொட்டிகளில் வளர்க்கப்பட்டு வருவதை கண்டறிந்த போலீசார் ஜிதினிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான ஜிதின், கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஜிதினை கைது செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஐந்து கஞ்சா செடிகள், இரண்டு பொட்டலம் கஞ்சா மற்றும் கஞ்சா விதைகளை பறிமுதல் செய்ததோடு கஞ்சா செடி வளர்ப்பில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்